தமிழ் நண்பன்

Sunday, December 27, 2009

My sweet angel

புத்தகங்களாலும் அழுக்குத் துணிகளாலும்
நிரம்பிக் கிடக்கும்
என் மொட்டைமாடித் தனியறையில்
இப்போது இரண்டு மீன்கள்
கண்ணாடித் தொட்டிக்குள் உலவுகின்றன.
நானில்லாத பொழுதுகளில் அவை
சத்தமாய் பேசிக்கொள்வதாய் சொல்கிறார்கள்
இரண்டில் அழகானதிற்கு
உன் பெயர் வைத்திருக்கிறேன்.
ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப்போயேன்.

My sweet angel

ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா? என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது

My sweet angel

தோட்டத்து நாகலிங்கப்பூக்கள்
பின்னிரவு மழையில் கரைந்து
எழுப்பும் வாசம்
மீதமுள்ள இரவை
தூங்கவிடாமல் செய்துவிடுகின்றது
இந்தக் கிளர்வில்
இருளைக் கலைக்காது
மழையை வெறிக்கலாம்
ஆழப் புகைக்கலாம்
அத்தோடு
உன்னை முத்தமிட்ட
தருணத்தை நினைத்துக் கொள்ளலாம்.

My sweet angel

உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை

My sweet angel

கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்.
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்.
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே

My sweet angel

விளக்குகளை அணைத்ததும்
அவள் பிரகாசிக்கத் துவங்குவாள்
இருளில் ஒளிரும் பாஸ்பரஸ் நீயென்பேன்.
வெட்கத்தில் குழைந்து இன்னும் இறுக்குவாள்.
அவள் உடலிலிருந்து வெளியேறும் வெளிச்சம்
நட்சத்திரங்களின் பிரகாசத்திற்கு ஒப்பானது.
கருத்த வயல் வெளியில் அலையும்
மின்மினிப்பூச்சுகளின்
ஒளிச் சமிக்ஞைகளுக்கு ஒப்பானது.
ஒளியில் சிதறும் கருமை நான்
நானிலும் நுழையும் வெளிச்சமவள்..